ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்.
நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தவராவார்.
உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்:
‘நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளிகளைக் கவனிப்போம். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன். அதற்கு, “அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்.” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா ‘(என்னிடம்) வந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா? என கேட்டேன். அதற்கு ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்’ எனக் கூறினார்கள். இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம்’ என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்’ என்பதையும் சேர்த்தே கூறுவார்.
‘கன்னிப் பெண்களும் மாதவிடாய் பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்’ என்றும் உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்) எனக் கேட்டபோது, ‘மாதவிடாயுள்ள பெண் அரஃபாவிலும் மற்ற (மினா, முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?’ என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்கள்.
பெருநாள் தொழுகை தவறிவிட்டால் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
பெண்களும் வீடுகளிலும் குக்கிராமங்களிலும் இருப்போரும் இவ்வாறே செய்ய வேண்டும். ஏனெனில் ‘இது இஸ்லாமியர்களின் பெருநாள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளனர். ஒருவருக்குப் பெருந்hள் தொழுகை தவறிவிட்டால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என்று அதாஃ குறிப்பிட்டுள்ளார்.
கிராமப் புறங்களில் வசிப்பவர்கள் பெருநாள் தினத்தில் ஒன்று கூடி இமாம் செய்வது போன்றே இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என்று இக்ரிமா கூறினார்.