ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ (2)
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைவிசுவாசமிக்க, மிகவும் பரிசுத்தமான வாழ்வை மேற்கொண்டார்கள். அவர் தனது வருமானத்தை இறைவன் அனுமதித்த வகையிலேயே சம்பாதித்துப் பெற்றுக் கொண்டார். அதில் துளி அளவு கூட இறைவனது கோபத்திற்குட்பட்ட சம்பாத்தியத்தை அவர் பெற்றுக் கொண்டதில்லை.
இறைவன் அனுமதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் வருமானம், இரட்டிப்பாகக் கிடைத்தாலும் சரியே அதனை அவர் பெற்றுக் கொள்ள முயற்சித்ததுமில்லை. இன்னும் மிகவும் வசதிவாய்ந்த செல்வந்தராகவும் இருந்தார். அவர் இறப்பெய்திய பொழுது, மிக அதிக பெருமானமுள்ள சொத்துக்களை விட்டுச் சென்றார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறுதி ஹஜ்ஜின் பொழுது, அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற நேரத்தில் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள்.
அப்பொழுது, ”இறைத்தூதர் (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களே! என்னிடம் அதிகமான சொத்துக்கள் உள்ளன. அதற்கு எனது ஒரே ஒரு மகள் மட்டுமே வாரிசுதாரியாக உள்ளார். எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பாகங்களை இறைவனுக்காக நான் தானம் செய்ய விரும்புகின்றேன்” என்று கூறினார்கள்.
அப்பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “சஅதே! இது மிகவும் அதிகம், என்று கூறிய பொழுது, அப்படியானால் பாதிக்குப் பாதி கொடுத்து விடுகின்றேன்.
ஊஹ¤ம்! இல்லை. இதுவும் அதிகம் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பின் நான் மூன்றில் ஒரு பகுதியைத் தருகின்றேன் என்று சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கூறிய பொழுது, அப்படியே செய்யும்..!”
இருப்பினும் மூன்றில் ஒரு பகுதி என்பதும் அதிகமே! இருப்பினும் அவ்வாறே நீங்கள் கொடுங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதியாகக் கூறினார்கள். மேலும், தனது பெற்றோர் இறந்தவுடன் பொருளுக்காக ஒவ்வொருவரையும் அணுகி இரந்து பெற்றுக் கொள்வதைக் காட்டிலும், ஒருவர் தனது வாரிசுகளை பிறரிடம் கையேந்தாத அளவுக்கு, போதுமான அளவு பொருள் வசதியுடன் அவர்களை விட்டுச் செல்வது சிறந்தது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்.
இன்னும் இறைவனது திருப்பொருத்தத்திற்காக வழங்கப்படும் கொடைகளுக்குப் பகரமாக இறைவன் மிகச் சிறந்த அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்கக் காத்திருக்கின்றான். இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது நோய் மேலும் மேலும் முற்றிக் கொண்டிருந்தது. இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது விருப்பம் என்னவெனில், தனது மரணம் தனது விருப்பத்திற்குரிய நகரமாகிய மதீனாவில் வைத்து நிகழ வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக அவரது இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அமைதியற்று இருந்தது.
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது அமைதியற்ற அந்த நிலையைக் கண்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள், சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் மார்பின் மீது கையை வைத்து, இறைவனிடம் அவரது நோய் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்தார்கள். என்ன ஆச்சரியம்! கண் கட்டி வித்தை போல முன்னைக் காட்டிலும் அவர் மிகவும் ஆரோக்கியமான மனிதராக மாறி விட்டிருந்தார்.
அல்லாஹ் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது நோயைக் குணப்படுத்தினான். இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த பிரார்த்தனை சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பழுத்த பழமாக மாறும் வரைக்கும் நீடித்திருந்தது. அவரது நீண்ட வாழ்வு இஸ்லாத்திற்குப் பல வெற்றிகளைக் குவித்துத் தந்தது. அவரது போர்த்திறமையின் காரணத்தினால், அரபுக்கள் பல இறைநிராகரிப்பாளர்களை வெற்றி கொண்டார்கள்.
அவர் நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது, அவருக்காக இறைவனிடம் துஆச் செய்து விட்டு இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் ஒரு இனத்துக்கு ஆதாயத்தைத் தேடிக் கொடுத்து விட்டு, இன்னுமொரு இனத்துக்கு இழப்பை ஏற்படுத்திக் கொடுக்காத வரைக்கும் அவரை மரணம் தழுவாது என்று கூறினார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களது இந்த முன்னறிவிப்பானது மிகச் சரியானதாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் படை நடத்திச் சென்ற பொழுதெல்லாம், அரபுக்கள் வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்தார்கள், இன்னும் இறைநிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவி ஓடிக் கொண்டிருந்தார்கள். நோயிலிருந்து குணமான சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், அதற்குப் பின் பல முறை திருமணம் முடித்தார்கள். அதன் காரணமாக அவருக்கு முப்பத்தி நான்கு மகன்களும், ஒரு மகளும் பிறந்தார்கள்.
எப்பொழுதெல்லாம் இறைத்தூதர்ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்துவார்களோ, அப்பொழுதெல்லாம் இறைவன் மீதுள்ள அச்சம் காரணமாக சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கதறி அழக் கூடியவர்களாக இருந்தார்கள். அவரது கண்கள் கண்ணீரைச் சுரந்த வண்ணமாகவே இருக்கும்.
ஒரு நாள் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது, இப்பொழுது நம்முடன் சொர்க்கத்து மனிதரொருவர் வந்து இணைந்து கொள்ளப் போகின்றார் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அங்கிருந்த தோழர்கள் அனைவரும் யார் அந்த அதிர்ஷ்டக்காரத் தோழர் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அந்தத் தோழரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
அப்பொழுது, சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் அவையில் நுழைந்தவுடன், இவர் தான் அந்த மனிதர் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். இவர் தான் அந்த மனிதர், இவரது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக இருக்கின்றது, அவரது நாவு சுத்தமானது, அவரது இதயமும் சுத்தமானது, இன்னும் அவர் மிகச் சிறந்த படைத்தளபதி என்று சஅத் பின் அபீ வக்காஸ்ரளியல்லாஹ¤ அன்ஹ¤ பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் புகழாரம் சூட்டினார்கள்.
இத்தகைய சிறப்புகளுக்குரிய சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களுடன் பத்ர், உஹத் போன்ற போர்களில் கலந்து கொண்டிருந்தார்கள், அதுமட்டுமல்ல இன்னும் எண்ணற்ற போர்களில் கலந்து கொண்டு, இஸ்லாத்தில் தனக்கிருந்த தீர்க்கமான உறுதியை வெளிப்படுத்திக் காட்டினார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது இத்தகைய வீரமிக்க வரலாற்றுப் பக்கங்கள், இன்றளவும் இஸ்லாமிய வரலாற்றை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. நமக்கெல்லாம் மிகச் சிறந்த படிப்பினையாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.
தாயின் பாச வலை
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இறைநம்பிக்கை மற்றும் உறுதி மற்றும் அதில் உண்மையாகவும் இருந்ததின் காரணமாக உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இஸ்லாத்தினை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொழுது அவர் இளமை ததும்பும் வாலிபப் பருவம் கொண்ட இளைஞர். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இவரது தாயார் மிகவும் கவலையடைந்தார்.
நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு தன் மகன் சென்று விட்டானே என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார், அழுது புலம்பினார், தன்னுடைய மகனை எப்பாடுபட்டாவது தன்னுடைய பழைய மார்க்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடிதுடியாய்த் துடித்தார். அதற்காக வழக்கமாக தாய்மார்கள் கடைபிடிக்கும் அனைத்து வித முயற்சிகளையும் செய்து பார்த்தார். ஆனால் எதிலும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இணங்கிப் போகவில்லை. இஸ்லாத்தில் உறுதியாக நிலைத்திருந்தார்கள். இறுதியாக, சஅதே..! நீ மீண்டும் நமது முன்னோர்களின் பழைய மார்க்கத்திற்கு வரவில்லை என்று சொன்னால், நான் சாகும் வரை உண்ண மாட்டேன், பருக மாட்டேன்..! என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சபதமிட்டார். இறுதியாக..! என்னுடைய மகனை ஒரு முஸ்லிமாகப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் செத்து மடிவதே மேல் என்றார்.
தாயினுடைய இந்த தந்திரங்களுக்கெல்லாம், சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மசிந்து இடங்கொடுத்து, விட்டுக் கொடுத்துப் போகவில்லை, உணர்ச்சிகளுக்கு அடிமையாகவில்லை. அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்த அந்த இஸ்லாமிய வேர், இறைநம்பிக்கை என்னும் மரமாக வளர்ந்திருந்ததன் காரணமாக, எத்தகைய புயல் காற்றும் கூட.., அவரது பாதத்தின் உறுதியைப் பெயர்த்து, அந்த மரத்தை அசைக்கக் கூட யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது சாகும் வரை உண்ண, பருக மாட்டேன் என்ற சபதமெடுத்த சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது தாயார் பசிக் கொடுமையின் காரணமாக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார்.
தனது தயாரைப் பார்த்து, தனது இறைநம்பிக்கையின் உறுதியை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்: “என்னுடைய தாயாரே! உங்களுக்கு ஒரு நூறு உயிர்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு உயிராக உங்களிடம் பறிக்கப்பட்டுப் போய்க் கொண்டிருந்தாலும், நான் என்னுடைய இறைநம்பிக்கையிலிருந்து, நான் கொண்டிருக்கும் ஈமானின் வேகத்தில் ஒன்றையேனும் நான் இழக்கத் தயாராக இல்லை, நான் எனது இறை மார்க்கத்தை விட்டு விட்டு, உங்களது உயிரைப் பாதுகாக்க நான் முன்வரப் போவதில்லை, எனவே இந்த உங்களது தந்திரங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது தாயார் அவர்களே! நீங்கள் உண்ணுவதும் அல்லது உண்ணாமல் இருப்பதும், இன்னும் பருகுவதும் பருகாமல் இருப்பதும் உங்களது விருப்பம். நான் என்னுடைய இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களை விட்டும் நான் வர மாட்டேன்” என்று கூறி விட்டார்.
நம்முடைய தந்திரங்கள் எதுவும் பலனிளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்தத் தாய், தன்னுடைய உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். அவரது இந்தத் துணிவும் உறுதியும் இன்றைக்கும் நமக்கொரு சிறந்த பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதனைப் பற்றி இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் : “ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள் (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”(31:15)
கதீஸிய்யாப் போர்
உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த கதீஸிய்யாப் போர் நடைபெற்றது. இந்தப் போருக்கு தலைமைத் தளபதியாக சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் நியமித்தார்கள். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவாக நிறைவேற்ற விரும்பிய சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், உயிர் தியாகத்தில் வேட்கை மிக்க, ஒரு பக்கம் வீரத்தையும், இன்னொரு பக்கம் இறைநம்பிக்கையில் உறுதியும் மிக்க முப்பதாயிரம் படையினரைத் தயார்படுத்தினார்கள். அவர்கள் தங்களது கையிலே ஆயுதத்தையும், இதயத்தில் இறைநம்பிக்கை உறுதியையும் எடுத்துக் கொண்டவர்களாக மதீனாவை விட்டு கதீஸிய்யாவை நோக்கி, தங்களது எதிரிகளை சந்திக்கப் புறப்பட்டார்கள்.
இப்பொழுது கதீஸிய்யாவில் எதிரிகளுடன் இஸ்லாமியப் படை மோதிக் கொண்டிருக்கின்றது. அப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களிடமிருந்து வந்த தபாலைப் பெற்றுக் கொள்கின்றார்கள். அதில் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இவ்வாறு சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்கள் : சஅதே..! நீங்கள் இப்பொழுது போராடிக் கொண்டிருக்கும் பூமியான கதீஸிய்யா ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற பிரதேசமாகும். இந்தப் போரில் நீங்கள் வெற்றி பெற்றீர்களானால் முழு ஈரானியப் பிரதேசமும் உங்களது கையில் கிடைக்கும்.
ஈரானின் நுழைவாயில் தான் கதீஸிய்யா. நீங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், எனவே உங்களிடம் அடக்கி ஆளும் குணம் இருக்கக் கூடாது. இறைவனது அடிமைகளாகிய ஒருவரது இறைநம்பிக்கை மற்றும் அதில் உறுதி ஆகியவற்றில் மக்களுக்கிடையே உள்ள மதிப்பை நீங்கள் கௌரவிக்குமுகமாக நடந்து கொள்ள வேண்டும். தனது அடியார்களுக்கு உதவி செய்யவும், இன்னும் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவனாக இருக்கின்றான். இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தப் பணியை நம்மிடம் விட்டுச் சென்றார்களோ, அந்தப் பணியின் மீதே நமது கவனம் இருக்கட்டும், என்று அந்த தபாலில் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இன்னும் அந்த மடலின் இறுதியில், உங்களது போர் நடவடிக்கையின் அனைத்து முன்னேற்றங்கள் பற்றியும் எனக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்துக் கொண்டே இருங்கள் என்றும் கட்டளையிட்டிருந்தார்கள். அதாவது, போர்க்களத்தில் எவ்வாறு இறங்கினார்கள்? அவர்களது தங்குமிடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? எதிரிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தூரம்? சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு நிமிட நடவடிக்கையும் எவ்வாறு இருந்து கொண்டிருக்கின்றது, என்பதைப் பற்றிய படப்பிடிப்பைக் காண உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் விரும்பினார்கள்.
கலீஃபா உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக, தனது ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும், அதன் விரிவான தகவல்களையும் தலைநகருக்கு உடனுக்குடன் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களுக்கும் இன்னும் ஒவ்வொரு குழுவுக்கு தான் என்னனென்ன பணிகளை கொடுத்திருக்கின்றேன் என்பதனைக் கூட சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் குறிப்பிட்டு, தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஈரானியப் படைகளும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை, அவர்களும் தங்களது முழுப்பலத்தையும் திரட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். இன்னும் இதுமாதிரியானதொரு படையை அவர்கள் இதற்கு முன் கண்டதுமில்லை. இரு படைகளும் முழு வலிமையுடன் தங்கள் தங்கள் வீரப் பெருமைகளை அசை போட்டுக் கொண்டு, படைக்களத்தில் மோதிக் கொண்டன. ஈரானின் மிகப் புகழ் வாய்ந்த படைத்தளபதி ஜெனரல் ருஷ்தும் என்பவரது தலைமையில் ஈரானியப் படைகள் போர்க்களத்திற்கு வந்திருந்தன.
இப்பொழுது போர் நிலைமைகளைப் பற்றி உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தகவல் அனுப்பும் பொழுது, ஈரானிப் படைகளுக்கு தளபதியாக ருஷ்தும் என்பவர் வந்துள்ளார், இன்னும் அவர்களது படை முழு ஆயுதத் தயாரிப்புகளுடனும் இன்னும் அவர்களுடன் மிகப் பெரிய யானைப் படையும் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்னும் அவர்களுடன் மிகப் பெரிய படையணியும் வந்துள்ளது. சுருங்கச் சொன்னால், இந்தப் போர் மிகவும் கடுமையாக இருக்குமென்றே தெரிகின்றது என்று குறிப்பிட்டு எழுதி இருந்தார். இந்த நிலையில், நாம் எவ்வாறு நமது படையை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும், இன்னும் அது பற்றிய உங்களது கருத்தை அறிய நான் ஆவலுடன் இருக்கின்றேன் என்றும் எழுதினார்கள்.
ஈரானியப் படைகள் போர்க்களத்திற்குள் நுழையும் பொழுது அச்சம் கொள்ள வேண்டாம் என்று எழுதிய உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மேலும் தனது பதிலில், அகில உலகத்தின் அனைத்து சக்திகளும் நம்மைப் படைத்தவனாகிய வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்பதை எக்கணமும் மறந்து விடாதீர்கள். அனைத்துத் தருணங்களிலும் இறைவனைப் புகழ்ந்து போற்றி, அவனிடம் உங்களது பிரார்த்தனைகளைக் கோரிய வண்ணமிருங்கள், அவனது உதவியை கேட்டுப் பெற்ற வண்ணம் இருங்கள்.
இரண்டாவதாக, மிகவும் திறமை மிக்க, புத்திக் கூர்மையுள்ள, அனுபவமிக்க இஸ்லாமியப் படைவீரர்களைத் தேர்ந்தெடுத்து, நமது ராஜதந்திரிகளாக ஈரானிய மன்னரிடம் அனுப்பி வையுங்கள். அவர்கள் ஈரானிய மன்னரிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லட்டும், பின்னர் இரண்டு படைகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு அழைக்கட்டும். இன்னும், அந்த ராஜதந்திர நடவடிக்கையின் பொழுது, ராஜதந்திரிகளை ஈரானிய மன்னர் எவ்வாறு எதிர்கொண்டழைத்தார் என்பதைப் பற்றித் தனக்கு விரிவாகக் கடிதம் எழுதுமாறும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பணிப்புரை வழங்கி இருந்தார்கள்.
இன்னும் ஒவ்வொரு நிமிட நடவடிக்கையைப் பற்றியும் தனக்கு தகவல் தராமல் இருந்து விட வேண்டாம் என்றும் அவர்களுக்கு இறுதியாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்கள்.
இறுதியாக வல்ல அல்லாஹ் தான் நமது உதவியாளன், அவனே நம்மைப் பாதுகாக்கப் போதுமானவன் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்