| ''பித்அத்''தை மக்களிடம் திணிக்கும் மார்க்க அறிஞர்கள்! |
|
|
|
எம்.ஏ.முஹம்மது அலீ கடமையான வணக்கங்களைவிட 'பித்அத்'தான நூதனங்களை, ‘கடமையானது’ போல வலியுறுத்தி மக்களிடம் திணிப்பதில் சில பிரபலமான, உயர்வான பதவியில் இருக்கும் மார்க்க அறிஞர்களும்கூட தீவிரமாக இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இது ‘வேலியே பயிரை மேய்வது’ போலத்தான். மக்கள் மத்தியில் ‘பித்அத்’ ஆழமாக வேரூன்றியிருப்பதில் இவர்களின் பங்கு கணிசமானது என்பதை சொல்வதற்கு கசப்பாக இருந்தாலும் உண்மை அதுவாகத்தானே இருக்கிறது! நஃபீல் தொழுகைகளை ஜமாத்தாக தொழுவதை ஷரீஅத்தை வகுத்துத்தந்த மார்க்க அறிஞர்கள் மக்ரூஹ் என்றும் பித்அத் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி இருந்தும் பல ஊர்களில் ரமளான் மாதத்தின் 27 ஆவது இரவன்று தஸ்பீஹ் நஃபீல் தொழுகை எனும் பெயரில் மக்கள் பெரும் கூட்டமாக் தொழும் பழக்கத்தை பல ஊர்களில் உருவாக்கி வைத்துள்ளார்கள். மார்க்கத்தை எடுத்தியம்பும் மதரஸாக்களும், 'ஜாமிஆ'க்களும் உள்ள ஊர்களில் கூட அங்கிருக்கும் மூத்த அறிஞர்களாலேயே இந்த பித்அத் அரங்கேற்றப்படுகிறது. இது அந்த மார்க்க அறிஞர்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவோ அல்லது மக்களிடம் நற்பெயர் எடுக்க முயற்சிக்கும் செயலாகத்தான் படுகிறது. ஏனெனில் நடுஇரவுக்குப்பின் கூட்டங்கூட்டமாக, இந்த அழுத்தமான ஆதாரமில்லாத தஸ்பீஹ் தொழுகையை தொழுவதில் காட்டும் முனைப்பை,அன்று காலை ஸுபுஹுத் தெழுகையில் காணமுடிவதில்லை. இரவு முழுக்க விடிய விடிய தொழுதாலும் அது காலையில் தொழ அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்டுள்ள ஃபஜ்ர் தொழுகைக்கு ஈடாகுமா? இது அந்த மூத்த அறிஞர்களுக்கு தெரியாதா என்ன! தெரிந்தும் அவ்வாறு தொடர்கிறார்கள் எனும்பொழுது இவர்கள் மீது சமுதாயம் குற்றம் சுமத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? சென்னையிலுள்ள காஷிஃபுல் ஹுதா மதரஸாவிலிருந்து வெளியாகும் ‘மனாருல் ஹுதா’ மாத இதழில் வெளியான ஒரு கேள்வி பதிலில், தஸ்பீஹ் நஃபீல் தொழுகையை ஜமாத்தாக தொழுவது பற்றி கேட்கப்பட்டதற்கு, ‘உங்கள் ஊரில் இது போன்று எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், எத்தனைப்பேர் கூட்டமாக தொழுதாலும், எவ்வளவு பெரிய ஆலிம் இத்தொழுகையை நடத்தினாலும் இது தவறுதான். இது பித்அத் மட்டுமின்றி மக்ரூஹ் என்றும் சிலர் இதை மக்ரூஹ் தஹ்ரீம் என்றும் குறிப்பிட்டு, மக்ரூஹ் தஹ்ரீம் என்பது ஹராமுக்கு நெருக்கமாகும்’ என்று பதிலளித்திருந்தார்கள். இப்போது செல்லுங்கள்; பித்அத்திற்கு ஃபர்ளைவிட முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பது யார்? நீண்ட காலமாக மக்களிடம் வேரூன்றிவிட்ட பித்அத்துகளை களைவதற்கு முனைந்தால் சமூகத்தில் குழப்பம் விளையலாம் என்று சிலர் அதற்கு சப்பை கட்டுவது சகிக்க முடியாததாகும். நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் மருந்து கசப்பாக இருந்தாலும் கொடுக்காமலா இருக்கிறார்? நோயாளி மறுத்தாலும் மருத்துவர் அதனை வற்புறுத்தி குடிக்கச் செய்வது போல ஒவ்வொரு மார்க்க அறிஞரும் சமூக வைத்தியராக மாற வேண்டும். அதை விடுத்து அவர்களே நோயாளியானால் சமூகம் என்னாவது?! இதுபோன்ற தவறான அறிஞர்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்று நம்பக்கூடியவர்கள் எளிதில் பித்அத்துகளில் வீழ்ந்துவிடுகிறார்கள். இறைநிராகரிப்பிலிருந்து எப்படி மக்களை காப்பாற்றுவது கடமையோ அதைப்போல் இதுபோன்ற தவறான பாதையில் மக்களை வழிகெடுக்கும் மார்க்க அறிஞர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுவதும் கட்டாயக் கடமையாக எண்ணி ஒவ்வொரு முஸ்லீமும் செயல்பட்டால் தான் இது சாத்தியமாகும். அதற்கு ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்தவராக மாற வேண்டும். ஆம்! அல்லாஹ் தனது திருமறையில் கேட்கின்றான், ‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?’(39:9). அத்துடன் விட்டானா? இல்லையே! ‘கல்வி கற்பது ஆண் பெண் அத்தனை பேரின் மீதும் கட்டாயக் கடமை’யாகவும் அல்லவா ஆக்கியுள்ளான்! விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு மார்க்கம் குறித்த ஏராளமான விஷயங்களை நூல் வடிவில் மட்டுமின்றி இன்டர்நெட் - கணினி மூலமாகவும் மிக மிக எளிதாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளதே! மறுமையில் அல்லாஹ்விடம், ‘எனக்கு எதுவும் தெரியாது!’ என்று சொல்லி மற்றவர்களை நோக்கி கைநீட்டி தப்பிக்க முடியுமா என்ன?! சிந்திப்போம் சீர்பெறுவோம். அல்லாஹ் அருள் புரிவானாக. www.nidur.info
|



