| ஒரு கருவின் மௌன அழைப்பு |
|
|
|
கவிதை [ ஹலோ, ஹலோ, அம்மா, நான் இங்கு வானத்தில் நடக்கிறேன், தேவதைகளுடன் விளையாடுகிறேன், நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன். இருந்தாலும் உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது. உங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி நீங்கள் கொலை செய்யலாம்? கத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய உடலைக் கீறிச் சிதைத்தன. என்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள். என்னை யார் குளிப்பாட்டினார்கள்? குப்பைத்தொட்டியில் அல்லவா வீசிவிட்டார்கள்!]
ஒரு கருவின் மௌன அழைப்பு
ஹலோ! அம்மா... அஸ்ஸலாமு அலைக்கும்... நான் சொர்க்கத்திலிருந்து பேசுகிறேம்மா எப்படி இருக்கீங்கமா? இங்கே சொர்க்கத்தில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன; காட்சிகள் வண்ணமயமாக ஜொலிக்கின்றன!
பாலாறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; வசந்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது; குருவிகள் இசைக்கின்றன, குயில்கள் பாடுகின்றன, மயில்கள் ஆடுகின்றன, மான்கள் துள்ளி ஓடுகின்றன; இங்கு எப்போதுமே இறைவனின் புகழ்ச்சிதான், நான் இங்கு வானத்தில் நடக்கிறேன் தேவதைகளுடன் விளையாடுகிறேன் நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன். இருந்தாலும் உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது.
ஹலோ, ஹலோ, அம்மா சொல்லுங்க! அப்பா எப்படி இருக்கிறாங்க? வீட்டில் எல்லோரும் சௌக்யமா? சொல்லுங்கமா...! பூமி, வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், உலகம் எப்படியிருக்கிறதுமா? தூக்கம், விழிப்பு, சிரிப்பு, அழுகை இதெல்லாம் எப்படியிருக்கு? சொல்லுங்கம்மா!
அண்ணனுடைய கண்களைக் கத்தியால் குத்துவாயா? அக்காவுடைய தலையைக் கல்லாலே நசுக்குவாயா? உன்னுடைய உயிரை உன்னுடைய கைகளாலேயே அழிப்பாயாமா? இப்படிச் செய்ய மாட்டீங்க இல்ல? என்கிட்டே மட்டும் ஏன்மா இப்படி நடந்துகிட்டீங்க? சொல்லுங்கம்மா
நான் வாழ்வதற்குரிய உணவை என் விதியிலிருந்து நான்தாமா கொண்டுவரேன் உங்ககிட்டயிருந்து நான் பங்கு கேட்டேனா? எந்த இறைவன் உங்களுக்கும் எல்லாருக்கும் உணவு வழங்கினானோ அவன்தான் எனக்கும் வழங்கினான்.
நான் உலகத்தில் சில நாட்கள் வாழ்ந்திருந்தால் எந்த சோதனை உங்களுக்கு வந்திருக்கும்? அப்பாவுடைய மார்பில் புரண்டிருப்பேன்! அண்ணனுடைய விரல்களைப்பிடித்து நடந்திருப்பேன்! அக்காவுடன் சிரித்துப்பேசி விளையாடியிருப்பேன்! உங்களிடம் கதை கேட்டுக்கொண்டே உங்கள் மடியில் தூங்கிப்போயிருப்பேன்!
ஆனால்... ஆனால்... நீங்கள், நான் வாழும் உரிமையைப் பறித்துவிட்டீர்கள் உங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி நீங்கள் கொலை செய்யலாம்? கத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய உடலைக் கீறிச் சிதைத்தன என்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள் என்னை யார் குளிப்பாட்டினார்கள்? குப்பைத்தொட்டியில் அல்லவா வீசிவிட்டார்கள்! ஹும்... ஹும்...!
அன்பு அன்னையே! பாசத் தாயே! இதை மட்டும் சொல்லுங்கள்! உலகம் கூறியதா இங்கு மனிதர்கள் போதுமென்று! பூனை, நாய்கூட இப்படிச் செய்யறத நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? ஹலோ மா, நான் சொர்க்கத்திலே சந்தோஷமா இருக்கேன் ஆனால், இருந்தும்... அடிக்கடி உங்களை நினைத்துக்கொள்கிறேன். இதை மட்டும் சொல்லுங்கமா!
என்னுடைய நினைவு உங்களுக்கு வந்து காயப்படுத்துகிறதா? எப்போதாவது எனக்கு நீங்கள் பேர் வைச்சிருந்தீங்களா? என் நினைவு உங்களுக்கு வந்தால் ஒருநாள் நீங்கள் வந்து என்னைச் சந்திக்கணும் இந்தச் சொர்க்கத்திற்கு வந்திருணும். ஆனால்... ஆனால்...! என்னுடைய இறைவன், என்னுடைய அதிபதி அப்போது உங்ககிட்ட கேட்பான் "என்ன காரணத்தினால் உன் மகளைக் கருவிலேயே கொலை செய்தாய்?" என்று. சொல்லுங்கமா,
அப்பொழுது என்ன சொல்வீங்க படைப்பாளனும், ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்விடம்? யோசிங்கமா, கொஞ்சமாவது யோசிங்க...! சீக்கிரமா யோசிங்க! ஆனா... ஆனா... என்னைச் சந்திக்க சொர்க்கத்துக்கு ‘எப்படி’மா வருவீங்க? ஹலோமா, ஹலோ, ஹலோமா, ஹலோ... ஹலோ...... அம்மா...... அம்ம்மா
நன்றி: சமரசம், 1-15 ஜன 2012
|




