Home கட்டுரைகள் உடல் நலம் உடலுக்கு உகந்த தண்ணீர் சிகிச்சை (water therapy treatment)
உடலுக்கு உகந்த தண்ணீர் சிகிச்சை (water therapy treatment) Print E-mail

உடலுக்கு உகந்த தண்ணீர் சிகிச்சை (water therapy treatment)

உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல்நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம்.

ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது. உடல் இளைப்பது, எய்ட்ஸ் பாதித்தவர்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது என்றால் அது தண்ணீர் சிகிச்சைதான்.

தண்ணீர் சிகிச்சை என்றால் ஏதோ புதிய சிகிச்சை முறை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதுதான் தண்ணீர் சிகிச்சையாகும்.

பலரும் சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பார்கள். அதற்குப் பிறகு தண்ணீர் பக்கமேப் போக மாட்டார்கள். அப்படியானவர்களது உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று எண்ணிப் பார்த்தால் அவர்களது நெஞ்சே ஒரு நிமிடம் நின்று விடும்.

தண்ணீர் நம்மை புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. தண்ணீர் குடிப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும். நாளொன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். கோடை காலத்தில் இன்னும் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.

அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளையும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வையுங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பலரும் தண்ணீர் அதிகமாக அருந்த மாட்டார்கள். அதற்கு முக்கியக் காரணம் பள்ளிகளில் கழிவறையை அடிக்கடி பயன்படுத்த முடியாது என்பதுதான்.

எனவே பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளின் நிலைமையை சொல்லிப் புரிய வையுங்கள். குழந்தைகளுக்கும் போதுமான நீர் கொடுத்தனுப்புங்கள்.

உடலை இளைக்க வைக்கவும் கூட தண்ணீர் பயன்படுகிறது. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினாலும் குறையாத உடல் எடை, அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் குறைவதைக் கண்கூடாக பார்க்கலாம்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடித்தால் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிக் கொண்டு கடைசியில் உடலில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுகிறது. எனவே அதிகமாகத் தண்ணீர் குடித்து வருபவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கும்.

எய்ட்ஸ் பாதித்தவர்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயமே குடிநீர்தான். குடிநீர் மூலமாக நிறைய நோய்கள் பரவ வாய்ப்புண்டு என்ற போதிலும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியிருப்பதால் அடிக்கடி சுத்தமான குடிநீரை பருகி வருவது மிகவும் நல்லது.

கோடை காலத்தில் உடலின் வெப்பத்தைக் குறைக்க தோல் எடுத்துக் கொள்ளும் முக்கியமான விஷயம் வியர்வை. வியர்வையின் மூலம் உடலின் வெப்பத்தை சீராக வைக்கிறது. எனவே கோடையில் உடலுக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது. அதை ஈடு செய்ய வேண்டியது நமது கடமையாகிறது.

எனவே தினமும் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று நீர்த் தன்மைக் கொண்ட பழங்களையும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் மோர், இளநீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பசிக்கிறது, ஆனால் வேலையோ அல்லது சாப்பாட்டைத் தள்ளிப் போட வேண்டிய அவசியமோ ஏற்படும் போது உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீரைக் குடியுங்கள். இது உங்கள் வயிற்றில் பசியைத் தூண்டிய ரசாயனங்கள் வயிற்றை அரித்து விடாமல் தடுக்கும். அதே சமயம் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்த வேண்டாம். சாப்பிட்ட பிறகு தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். இது ஜீரணத்திற்கும் உதவும்.

உடல் களைப்பு ஏற்படும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது உப்பும், சிறிது சர்க்கரையும் கலந்து அருந்தலாம். உடனடியாக உங்கள் உடலுக்குத் தேவையான சக்தியை இந்த ஒரு டம்ளர் நீர் அளித்துவிடும். அதிக நேரம் உண்ணாவிரதம் இருப்பவர்களும் உடனடியாக உணவை உண்ணாமல் பழச்சாறு அல்லது தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக் கொண்டு பின்னர் சாப்பிடலாம்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது வயிற்றைச் சுத்தப்படுத்த உதவும். பல வியாதிகள் உங்களை அண்டாமல் தடுக்கும்.

தண்ணீர் குடிப்பதற்கு யாராவது நினைவூட்ட வேண்டும் என்று சொல்பவர்கள், தினமும் ஒரு வாட்டர் கேனில் தண்ணீரை ஊற்றி உங்கள் கண்ணில் படும் இடத்தில் வைத்து விடுங்கள். இதனால் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நீரைக் குடித்திருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம். தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் அதிகப்படியான நீரைக் குடிக்க வேண்டாம். அவ்வப்போது சிறிது சிறிதாக நீரை அருந்தினால்தான் அது உடலுக்குப் பயன்படும்.

எனவே சுத்தமான சுகாதாரமான நீரைக் பருகுவோம். உடல் ஆரோக்கியத்தைக் காப்போம்.

source: http://onlytamiltamil.blogspot.com/2011/01/water-therapy-treatment-in-tamil.html