Home இஸ்லாம் நோன்பு போய் வா ரமலானே, போய் வா!
போய் வா ரமலானே, போய் வா! Print E-mail

போய் வா ரமலானே, போய் வா! .

மனமின்றி வழியின்றி விடை தருகிறோம்

மனமுருகி இறையோனை வேண்டுகிறோம்

மீண்டும் நீ எங்களிடத்தில் வந்திடவே....

மறு ஆண்டும் உனை நாங்கள் நோற்றிடவே!

 

நோற்காமல் இருந்திட்ட எங்களில் சிலர் மீது

கோபமோ ரமலானே.. செல்கிறாயே நீ....?

இறையருளால் அந்த சிலரும் திருந்திடுவர்

இன்ஷா அல்லாஹ் மீண்டும் நீ வந்துவிடு!

 

சுடும் வெயில் நேரங்களிலும்

கடும் குளிர் காலங்களிலும்

வசந்தமாக வந்துதிக்கும் ரமலானே....! - உன்

வருகையால் நாங்கள் வருந்தியதில்லை ஒருபோதும்!

 

உன் இரவுகளில் நின்று வணங்கியும்

உன் பகலில் பசித்திருந்தும் தவித்திருந்தும்

தீச்செயல்களை 'தீ'யென ஒதுக்கியும்

தீனோடு எங்களை ஒன்றிணைய வைத்து

 

உன்னில் திருக்குர்ஆனை இறக்கி

அதன்மூலம் உன்னை சிறப்பித்து

எங்களின் நற்பண்புகளைப் புதுப்பிக்க

இம்மண்ணில் மகத்தான அருளளித்த

 

எல்லாம் வல்ல ஏக இறையோனுக்கே

எந்நாளும் புகழனைத்துமென கூறி

மீண்டும் எங்களிடத்தில் நீ வந்திடவே....

மனமுருகி வல்லோனை வேண்டுகிறோம்.

 

source: http://payanikkumpaathai.blogspot.com/2011/08/blog-post_3287.html#more